சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மண்விளக்கு வைத்து பூஜை; மண்பாண்டம் தொழிலில் முன்னேற்றம் வரும் ஆன்மீகம் வளரும் என பக்தர்கள் நம்பிக்கை
காங்கேயம்:காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மண்விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது.சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்தரட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் 26 ம் தேதி முதல் புடவை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டம், சின்னாண்டகோவில், தனிகைநாதன்,33,என்ற பக்தரின் கனவில் மண் விளக்கு வைக்க உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மண்விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.தனிகைநாதன் கூறியதாவது, குழந்தை வடிவில் முருகன் மயிலுடன் கனவில் வந்து, சிவன்மலை பெட்டியில் மண்விளக்கு வை என தெரிவித்ததாவும், திருச்செந்தூர் முருகன் கனவில் வந்து மண்விளக்கு சிவன்மலைக்கு கொண்டு செல் என சென்னார். நேற்று மண்விளக்கு கொண்டு வந்தேன் என்றார்.இது பற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். மண்விளக்கு வைத்துள்ளதால் இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.