மேலும் செய்திகள்
'இறைவனை மகிழ்வோடும் அன்போடும் வழிபடவேண்டும்'
05-Feb-2026
திருப்பூர்: 'தினமும் திருவாசகம் படித்தால், மனதிலுள்ள தீய குணங்கள் அனைத்தும் நீங்கும்; எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்' என சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார். கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் தொடர் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வே குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் இந்த வகுப்பில், கோவையை சேர்ந்த சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: சிவபெருமான், திருப்பெருந்துறையில் எழுந்தருளிவந்து மாணிக்கவாசகருக்கு அருள் செய்தார். அதனை, 'நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி' என, சிவபுராணத்தில் மனமுருகி பாடுகிறார் மாணிக்கவாசகர். நீயாகவே எனக்காக எழுந்தருளி வந்து, உனது திருவடிகளை காட்டி மகிழ்வித்தாய் என, உருகுகிறார். அருளாளர்கள் எல்லோரும் பெருமானின் திருவடிகளை அடைவதற்காகவே விண்ணப்பம் செய்கின்றனர். இந்த உயிர்கள் யாவும் அடையவேண்டிய இடம், பெருமானுடைய திருவடி. அன்பான, எளிமையானவர்களுக்கு, அந்த திருவடியை, பெருமான் தானாகவே வந்து காட்டுகிறார். யாரெல்லாம் அன்பு காட்டுகின்றனரோ, அவர்களுக்கு அருள் என்கின்ற கருணையை திரும்ப தருகிறார் பெருமான். நெஞ்சில் ஆணவத்தால் ஏற்படும், காமம், குரோதம் போன்ற தீயனவற்றை நீக்குகிறார். தினமும் திருவாசகம் படித்தால், மனதிலிருக்கும் தீய குணங்கள் அனைத்தும் விலகி விடும். எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்க பெருமான் அருள்கிறார். எம்பெருமானை வழிபாடு செய்பவர்களும், உள்ளுணர்வால், பெருமான் அன்பு செய்ததாகவும் உணர்பவர்களுக்கு, சுவாமி கருணை மழை பொழிகிறார். இவ்வாறு, அவர் பேசினார்.
05-Feb-2026