பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உடுமலை: உடுமலையில் பிரதான ரோடான ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, கல்பனா ரோடு போன்ற ரோடுகள் பிரதான ரோடுகளாக உள்ளன. இதில் முக்கியமான ரோடாக, ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், எந்நேரமும் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இது மட்டுமல்லாமல், இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் இருந்து வருகின்றன. இந்த ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.