அமராவதி ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கை: களமிறங்கிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு
திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஏற்படும் உயிர்பலிகளைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாராபுரம் அமராவதி ஆற்றில், பைபாஸ் புதிய பாலம் அருகே ஆபத்தான பாறை இடுக்கும், சுழல் உருவாகும் ஆழமான குழியும் உள்ளது. வெளிப்பார்வைக்கு தெரியாத வகையில் இந்த இடம் ஆபத்தானதாக உள்ளது. இது வரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் அடுத்தடுத்த இரு நாளில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. நேற்று காலை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்தனர். உயிர் பலிகள் ஏற்படும் ஆபத்தான இடத்தில் உள்ள பாறைகளை அகற்றி ஆழமான குழி ஏற்பட்டுள்ள இடத்தில் அவற்றை போட்டு குழியை மூடுவது; ஆற்றின் மையத்தில் ஒரு இடத்தில் அதிகளவில் பாயும் தண்ணீரை தடுத்து அதைப் பிரிக்கும் வகையில், பாறைகளை குவித்து தடுப்பு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்கு போலீசார், வருவாய் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் முன்னின்று ஆலோசனைகள் வழங்கினர். இயந்திரம் கொண்டு வந்து ஆற்றினுள் இறக்கி இப்பணி நடந்தது. இன்று மீண்டும் இப்பணியை தொடர்ந்து மேற்கொண்டு, முற்றிலும் ஆபத்தை தவிர்க்கும் வகையில் சீரமைக்கப்படும் என இதில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தெரிவித்தனர். இப்பணியை மேற்கொண்டுள்ள தன்னார்வலர்களுக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.