உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் தொழிலை பாதுகாக்கணும்! முதல்வருக்கு சைமா வேண்டுகோள்

பனியன் தொழிலை பாதுகாக்கணும்! முதல்வருக்கு சைமா வேண்டுகோள்

திருப்பூர் ; தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி, திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க வேண்டுமென, 'சைமா' சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.திருப்பூர் பின்னலாடை தொழில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களுக்கும், பல்வேறு மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது; லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது. பின்னலாடை தொழில், பலகட்ட தாக்குதலால் நெருக்கடியான சூழலில் தள்ளப்பட்டுள்ளது.குஜராத், மகாராஷ்டிரா, ம.பி., போன்ற வடமாநிலங்களில், ஜவுளித்தொழில் துவங்க அதிகப்படியான சலுகை வழங்கி வருகின்றனர். 'நிட்டிங்', டையிங், பிரின்டிங் மற்றும் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் அமைக்க, ஊக்கம் அளிக்கும் வகையில், சலுகைகள் தாராளமாக வழங்கப்படுகிறது.மின்சார மானியம், முதலீட்டு மானியமும் வழங்கப்படுகிறது. இதன்காரணமாக, ஏற்றுமதி வர்த்தகத்திலும் சரி, உள்நாட்டு சந்தையிலும், வடமாநிலங்களுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.வடமாநிலத்தில் உற்பத்தியாகும் ஆடை விலைக்கும், திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடை விலைக்கும், 10 முதல் 20 சதவீத வேறுபாடு உள்ளது.மாநில அரசுகள் வழங்கும் சலுகையை பயன்படுத்தி, ஆடை விலையை குறைவாக வழங்கி வருகின்றனர். அவர்களுடன் போட்டியிட்டு, ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை செய்வது கடினமாக உள்ளது. சலுகைகள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை; தமிழக அரசு, புதிய வரி உயர்வு, மின் கட்டண உயர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''மாநில அரசுகள் பல்வேறு சலுகை வழங்குவதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி, திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ