சேமிப்பு கணக்கில் முறைகேடு; சரிபார்த்து கொள்ள அழைப்பு
திருப்பூர்; திருப்பூர் அவிநாசி ரோடு, காந்தி நகரில் உள்ள தபால் அலுவலகத்தின் முன், கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு என குறிப்பிட்டு ஒரு பொது அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.அதில், 'காந்திநகர் அஞ்சலகத்தில் நடந்த முறைகேட்டின் காரணமாக பொதுமக்கள்தாங்கள் காந்திநகர் அஞ்சலகத்தில் துவங்கிய,கட்டிய சிறு சேமிப்பு கணக்குகள் புத்தகத்தில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என துணை அஞ்சல் அதிகாரியிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.தபால் அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, 'சிறுசேமிப்பு கணக்கு பிரிவை சேர்ந்த இருவர் பணியில் முறைகேடு செய்துள்ளனர்; இதனை தணிக்கையின் போது கண்டுபிடித்துள்ளனர். வாடிக்கையாளர் செலுத்திய தொகையும், சிறுசேமிப்பு புத்தகத்தில் வரவு வைத்த தொகையிலும் மாறுதல் இருந்தால், பிரச்னை வரும் என்பதால், சேமிப்பு கணக்கை மீளாய்வு செய்ய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமனிடம் கேட்ட போது, ''காந்தி நகர் அஞ்சலகத்தில், சில சேமிப்பு கணக்கு விவரங்களில் மாறுதல் உள்ளது. இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னாளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, சேமிப்பு கணக்கு விபரங்களை சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது,'' என்றார்.