மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை... எளிதானது! ஓரிட சேவை மையங்கள் செயல்பாடு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்கட்டமாக, நான்கு இடங்களில் ஓரிட சேவை மையங்கள் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம், பல்வேறு சேவைகளுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, உலக வங்கியுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தை (ரைட்ஸ்) செயல்படுத்திவருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு, பல்வேறு சேவைகள் அருகாமையிலேயே கிடைக்கச்செய்யும்வகையில், வட்டார அளவில் ஓரிட சேவைமையங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 ஓரிட சேவை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. 4 இடங்களில் திறப்பு பணிகள் முடிந்தநிலையில், முதல்கட்டமாக, பல்லடம் கரடிவாடியில் அரசு மருத்துவமனை, அவிநாசியில் நம்பியாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், மடத்துக்குளத்தில் கணியூர் ஆரம்ப சுகாதார நிலையம், குடிமங்கலம் அரசு மருத்துவமனை ஆகிய நான்கு இடங்களில் ஓரிட சேவை மையம் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 14 பேர் நியமனம் ஒவ்வொரு மையத்திலும் பிசியோ தெரபி, மன வளர்ச்சி குன்றியோர், செவித்திறன் பாதித்தோர், பேச்சுத்திறன் பாதித்தோருக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுனர்கள், சமுதாய அமைப்பாளர், சமுதாய மறுவாழ்வு பணியாளர்களை உள்ளடக்கிய 14 பேர் நியமிக்கப்படுகின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் கூறுகையில், ''அடுத்தகட்டமாக, மூலனுார், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் பல்லடம் செம்மிபாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும் ஓரிட சேவைமையங்கள் திறக்கப்பட உள்ளன. படிப்படியாக அனைத்து சேவை மையங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்'' என்றார். என்னென்ன நன்மைகள்? மாற்றுத்திறனாளிகள் தற்போது, பிசியோதெரபி, பேச்சுத்திறன் பயிற்சி உள்பட பல்வேறு தேவைகளுக்காக, தொலை துாரங்களிலுள்ள சிறப்பு பள்ளிகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓரிட சேவை மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சேவைகளும், ஒரே இடத்தில், மிக அருகாமையிலேயே கிடைக்கும். பிசியோ தெரபி உள்பட பல்வேறு சிறப்பு சிகிச்சைகள், பயிற்சிகள் மட்டுமின்றி அடையாள அட்டைக்கான முகாம்களும் அம்மையங்களிலேயே நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு அலைச்சலும் தவிர்க்கப்படும். வரும் காலங்களில், இதனால், மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய அவசியம்கூட ஏற்படாது. - சந்திரமோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்.