சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டு கடுங்காவல் சிறை
திருப்பூர்: சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் கரியாம்பட்டியை சேர்ந்தவர் குமார் என்கிற ராஜ்குமார், 25. இவர், திருப்பூர் மாவட்டம், பல்லடம் - பனப்பாளையத்தில் தங்கியிருந்து ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருக்கும், 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்து கண்டித்தார்.அதன்பின், தேனிக்கு சென்ற ராஜ்குமார், மொபைல் போனில் சிறுமியிடம் பேசி வந்தார். கடந்த, 2021 மே 8ல், அன்று சிறுமி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் காணவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரித்ததில், சிறுமியை ராஜ்குமார், தேனிக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இதனையடுத்து, பல்லடம் மகளிர் போலீசார், 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து, சிறுமியை மீட்டனர்.இந்த வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கில், ராஜ்குமாருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.