| ADDED : பிப் 05, 2024 01:36 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, வஞ்சிபாளையம் ரோடு ரயில்வே பாதைக்கு மறுபுறத்தில் அருள்ஜோதி நகர் மற்றும் அப்போலோ நகர் உள்ளது. இவற்றில், 200 வீடுகள் உள்ளன.இப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதிக்காக, ரயில்வே பாதையையொட்டி அமைந்துள்ள மண் ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த மண் ரோட்டை ரயில்வே துறையினர், தங்கள் பகுதி எனக்கூறி கல் நட்டி உள்ளனர்.இதனால், பாதையை அளவீடு செய்து தர வேண்டும் என அப்பகுதியினர், மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால், பாதையை அளவீடு செய்து தரவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறினர். அதனை தொடர்ந்து, அதிகாரிகள் அளவீடு செய்தனர். ஆனால், பாதை எது என்பதை அறிவிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது:எங்கள் வீதிக்கு செல்லும் பாதை எது என்பது தெரியாமல் உள்ளது. இதனால், 16 ஆண்டாகியும் குடிநீர், ரோடு, சாக்கடை கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதியும் மாநகராட்சி அமைத்து தர மறுத்து வருகிறது.ரயில்வே செந்தமான பாதையை பயன்படுத்தி வருகிறோம். அது மண் பாதை என்பதால் அதில் கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பால், காஸ் வண்டிகூட வருவதில்லை. இதனால் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்து பாதையை கண்டு பிடித்து தர வேண்டும்.