| ADDED : நவ 28, 2025 03:30 AM
உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் நகர மக்களுக்கு தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. உடுமலையில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு போன்றவை பிரதான ரோடுகளாக உள்ளன. இதில் பஸ் ஸ்டாண்ட் எதிரில் முக்கியமான ரோடாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், இங்கு எல்லா நேரங்களிலும் போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது நகர மக்களுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது. சில நேரங்களில் சிறுசிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மக்கள் மட்டுமல்லாமல், வாகன ஓட்டுனர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே, உடுமலை நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.