உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.ஆர். நகரில் மரக்கன்று நடும் விழா

எஸ்.ஆர். நகரில் மரக்கன்று நடும் விழா

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், எஸ்.ஆர்., நகர் பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்களில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 'வெற்றி' அமைப்பின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், மாவட்டத்தின் பசுமை பரப்பை விரிவாக்கும் முயற்சியுடன், சிறகு விரித்து பறந்து கொண்டிருக்கிறது. கடந்த, 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, மரமாக வளர்த்துள்ளனர். நடப்பு ஆண்டில், 11வது திட்டமாக, மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும், மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளுடன், பசுமைப்பணி, பருவமழையுடன் போட்டி போட்டு நடந்து கொண்டிருக்கிறது. இத்திட்டத்தால் விழிப்புணர்வு பெற்ற மக்கள், தங்களால் இயன்ற அளவுமரக்கன்றுகள் நட்டு வளர்க்க முன்வருகின்றனர். அதைக்காட்டிலும், காரணமின்றி வளர்ந்த மரங்களை வெட்டும், பசுமை கொலையை தடுக்கவும், தட்டிக்கேட்கவும் தயாராகிவிட்டனர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி, 38 வது வார்டு, எஸ்.ஆர்., நகர் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில், நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதிகளில் உள்ள, 'ரிசர்வ்' சைட்டுகளில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, குடியிருப்போர் நல சங்கம் முடிவு செய்து, அதன்படி, வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. எஸ்.ஆர்., நகர் தெற்கு, காந்திஜி 3வது வீதி மற்றும் வடக்கு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே உள்ள நிலத்தில் மரக்கன்று நடப்பட்டது. 'ரிசர்வ்' சைட்களில், மரக்கன்று நடும் நிகழ்ச்சியை, கவுன்சிலர் சாந்தாமணி துவக்கி வைத்தார். மாநகராட்சி உதவி கமிஷனர் குமரன், பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சின்னதுரை, நகர்நல அலுவலர் முருகானந்த், 'வெற்றி' அறக்கட்டளை தலைவர் சிவராம், ஆண்டிபாளையம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் முருகசாமி, எஸ்.ஆர்., நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்,'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் ஆகியோர், 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை