திரவ உரங்களை பயன்படுத்துங்க; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
உடுமலை; சோமவாரப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், இந்திய உழவர் உறவு உரக்கூட்டுறவு நிறுவனம் சார்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இப்கோ நிறுவன அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்தார். கள அலுவலர் தீனா வரவேற்றார். கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது: ரசாயன உர பயன்பாட்டை குறைக்க, நானோ திரவ உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம். மத்திய அரசின் 'சங்கடஹரன் பீமா யோஜானா',வின் கீழ், 2 லட்ச ரூபாய் வரை விபத்து காப்பீடு பெறலாம். நானோ திரவ உரங்கள் இலை வழியாக தெளிக்கும் போது, துவாரங்கள் வழியாக எளிதாக சென்று தாவரங்களுக்கு தேவையான சத்துகளை வழங்குகிறது. பயிர்களின் தட்பவெப்ப நிலையை தாங்கும் தன்மையை சீர் செய்து மகசூலை அதிகரிக்கும். பேட்டரி, விசைத்தெளிப்பான், ட்ரோன் வாயிலாக எளிதாக திரவ உரங்களை தெளிக்கலாம். நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, கத்தரி, பொரியல்தட்டை, வாழை, கரும்பு, கம்பு உள்ளிட்ட அனைத்து சாகுபடிகளிலும், திரவ உரங்களை பயன்படுத்தலாம். இவ்வாறு, பேசினர். சோமவாரப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கணேசன், காசாளர் முருகானந்தம் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.