வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் பதினாறு வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, விரதம் இருப்பது. ஆடி மாதம் பவுர்ணமி வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.இந்நாளில், வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி, கலசம் ஒன்றில் லட்சுமியை வைத்து வணங்கி துவங்குவர். கலசத்தினுள், பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு போன்றவற்றை இட்டு, பட்டாடையால் அலங்கரித்து, லட்சுமியின் உருவச்சிலையை தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை, குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிவித்து, வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர். தீப ஆராதனை செய்து, இனிப்பான பலகாரங்களைப் படைப்பர். தொடர்ந்து, மஞ்சள் சரட்டை, விரதமிருந்தவர் கையில் கட்டுவர். படைக்கப்பட்ட பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள், புடவையுடன், சுமங்கலிகளுக்கு கொடுத்து ஆசி பெற்று, விரதத்தை பூர்த்தி செய்வர்.