பொங்கல் பண்டிகையால் காய்கறி வரத்து குறைந்தது
திருப்பூர், : பொங்கல், மாட்டுப்பொங்கல் தொடர் விடுமுறையால், உழவர் சந்தைக்கான காய்கறி வரத்து குறைந்தது.வழக்கமாக தெற்கு உழவர் சந்தைக்கு, 60 முதல், 65 டன் காய்கறிகள் விற்பனைக்கு வரும். தக்காளி வரத்து, 20 டன்னுக்கும் கூடுதலாக இருக்கும். 14 ம் தேதி பொங்கல், நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் என்பதால், சந்தை காய்கறி கொண்டு வரும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்தது.இதனால், உழவர் சந்தை வரத்து, 43 டன்னாக குறைந்தது. தக்காளி வரத்து, 14 டன்னாக இருந்தது. காய்கறி வரத்து குறைந்த போதும், பள்ளி, விடுதிகள் தொடர் விடுமுறை, பெரும்பாலானோர் வெளியூர் பயணம் என்பதால், காய்கறி விற்பனை சந்தையில் களைகட்டவில்லை. இதனால், காய்கறி விலை உயர்வு இல்லை. தக்காளி கிலோ, 24 ரூபாய்க்கு விற்றது.வடக்கு உழவர் சந்தையில், மாட்டுப்பொங்கல் நாளில் வரத்து குறைந்திருந்தது. அதே நேரம், பொங்கல் நாளில், 31 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது. 14 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. வாடிக்கையாளர் எண்ணிக்கை நடப்பு மாதத்தில் முதல் முறையாக, 4,260 ஆக உயர்ந்ததாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.