உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம்; பெண் போலீசுக்கு பாராட்டு

பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம்; பெண் போலீசுக்கு பாராட்டு

திருப்பூர்; திருப்பூரில் பிரசவ வலியில் துடித்த ஒடிசா பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்து ஆயுதப்படை பெண் போலீசார் உதவி செய்தார். தாயும், சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர். திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு (12:00 மணி) எஸ்.ஐ., பிரபுதேவா, வேலம்பாளையம் ஐ.எஸ்., போலீஸ் மணிகண்டன், ஆயுதப்படை போலீஸ் கோகிலா, வெற்றி செல்வன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கடந்து சென்ற ஆட்டோவில் பெண் கதறி அழுவது தெரிந்தது. உடனே போலீசாரை பார்த்ததும், டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார். தொடர்ந்து, ஒடிசாவை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறினார். உடனே, பணியில் இருந்த பெண் போலீஸ் கோகிலா ஆட்டோ உள்ளே சென்று பார்த்தார். பெண்ணுக்கு பிரசவ வலியில் பனிக்குடம் உடைந்து, வலியில் துடித்தது தெரிந்தது. சக போலீசாரிடம் தெரிவித்த கோகிலா, ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு, பெண் போலீசார் பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது. பின், மருத்துவமனைக்கு சென்றதும், தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, எஸ்.ஐ., மற்றும் ஐ.எஸ்., போலீசார் மற்றொரு வாகனத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு முன்னேற்பாடுகளை செய்ய விரைந்து சென்றனர். பிரசவம் பார்த்த பெண் போலீஸ் மற்றும் பணியில துரிதமாக செயல்பட்ட மற்ற போலீசாரையும் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். ஒடிசாவை சேர்ந்த சீதாராம் - பாரதி தம்பதி. அவிநாசி, கைகாட்டிபுதுாரில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். கர்ப்பிணியான பாரதிக்கு, 24 பிரசவ வலி ஏற்பட்டு ஆட்டோவில் அழைத்து செல்லும் போது, பனிக்குடம் உடைந்து, பிரசவ வலியால் துடித்தார். பணியில் இருந்த பெண் போலீஸ் கோகிலா, அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, பத்திரமாக குழந்தையை கையாண்டார். மருத்துவமனையில், இருவரும் அனுமதிக்கப்பட்டனர். பிரசவம் பார்த்த பெண் போலீஸ் நர்சிங் முடித்து இருப்பதால், பாதுகாப்பாக பிரசவம் பார்த்தார். - போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !