நிலங்களில் அடியுரம் இடும் பணி; விளைச்சலை அதிகரிக்க தீவிரம்
உடுமலை; மண்டல பாசனத்துக்கான சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க, விளைநிலங்களில் அடியுரம் இடும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., பாசன திட்டம் மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஒரே வகையான பயிர் சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்வதால், மண் வளம் குறைகிறது.ஓராண்டு இடைவெளிக்கு பிறகு, மேற்கொள்ளப்படும் சாகுபடியில், மண் வளம் குறைவால், மகசூல் குறைவு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, சாகுபடிக்கு முன்பு, அடியுரம் இட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு விரைவில், தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இப்பாசன பகுதியில், மக்காச்சோளம் அதிகளவு சாகுபடியாகும். இதில், அதிக மகசூல் பெற, தற்போதே அடியுரம் இட்டு, உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். முன்பு, மாட்டுச்சாணம் உட்பட தொழு உரங்களை விளைநிலத்தில் வீசி உழவு செய்வது வழக்கம்.தற்போது, கோழிப்பண்ணைகளில் கிடைக்கும், கோழி எரு, அடியுரமாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பருவமழைக்கு பிறகு இப்பணிகள் தீவிரமடைந்துள்ளது.