அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் கையை விட்டு ரூ.5,000 திருடியவர் கைது
திருவண்ணாமலை, :திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் கைவிட்டு, 5,000 ரூபாய் திருடியவரை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவில் தங்க கொடிமரம் அருகே, பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் விதமாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அது மற்ற உண்டியல்களை விட மேல்புறம், அகலமாக இருக்கும்.நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் கோவிலுக்கு வந்த ஒருவர், அந்த பிரார்த்தனை உண்டியலில் கையை விட்டு, காணிக்கை பணத்தை எடுத்தார். இதை பார்த்த கோவில் ஊழியர்கள், அவரை பிடித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன், 40, என தெரிந்தது. அவரிடமிருந்து, உண்டியலில் இருந்து திருடிய, 5,000 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.