சண்டிகேஸ்வரர் உற்ஸவத்துடன் தி.மலை தீப திருவிழா நிறைவு
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில், தீப திருவிழா நேற்று, சண்டிகேஸ்வரர் உற்ஸவத்துடன் நிறைவடைந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் டிச. 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 13ம் தேதி, 2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அய்யங்குளத்தில், 3 நாட்கள் நடந்த தெப்ப உற்ஸவத்தில் டிச.14ல் இரவு, சந்திரசேகரர், பராசக்தி அம்மன், 15ம் தேதி இரவு பராசக்தி அம்மன், 16ம் தேதி இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்ட நிலையில், நேற்றிரவு, சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இத்துடன், தீப திருவிழா நிறைவடைந்தது.