கீழ்பவானி வாய்க்காலில் சிலை கரைக்க தடை கோரி மனு
ஈரோடு, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தலைமையிலான விவசாயிகள், ஈரோடு கலெக்டர் கந்தசாமி மூலம், முதல்வர் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில், கடந்த சில ஆண்டாக விநாயகர் சதுர்த்தியின்போது செய்யப்படும் சிலைகளை, எதிர்ப்புகளை மீறி கரைத்து வருகின்றனர். கால்வாயில் துாக்கி வீசப்படும் சிலைகளின் உடைந்து போன பகுதி நீருக்குள் சென்று, மதகுகளை அடைத்து விடுவதால் நீர் நிர்வாகம் பாதிக்கிறது. சிலைக்கு பூசப்பட்டிருக்கும் ரசாயன கலவை நீரில் கலப்பதால், நீர் மாசுபடுகிறது. இதற்கு பாசன விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடப்பாண்டிலாவது கீழ்பவானி வாய்க்காலில் சிலைகளை கரைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.