விழுப்புரம் பைபாசில் திடீரென எரிந்த கார்
விழுப்புரம்,:கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் கோபிநாத், 40, ஆரணியில் உள்ள தனியார் கார் ஷோ ரூம் மேலாளரான இவர், நேற்று காலை விருத்தாசலத்தில் இருந்து ஆரணிக்கு, 'மாருதி ஸ்விப்ட்' காரில் புறப்பட்டார். பகல் 1:00 மணிக்கு, விழுப்புரம் பைபாஸ் சாலையில் எல்லீஸ்சத்திரம் அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, காரை நிறுத்தி கீழே இறங்கினார்.அதற்குள் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்த முயன்றார். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர், விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.