பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் முதியவர் சடலம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வேணுகோபால், 77; ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா, 62; இவர், கடந்த 6ம் தேதி சென்னை யில் உள்ள தனது மகள் பிரியதர்ஷினி வீட்டிற்கு சென்றார்.வேணுகோபால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று மதியம் 2:00 மணிக்கு மஞ்சுளா வீட்டிற்கு வந்தபோது, உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. கதவை தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்த உள்ளே சென்று பார்த்தார். அங்கு, வேணுகோபால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேணுகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், உடல் நலக்குறைவால் வேணுகோபால் இறந்ததும், அக்கம் பக்கத்தினருக்கு தெரியாததால் உடல் அழுகியதும் தெரியவந்தது. மேலும்,இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.