செஞ்சி புறவழி சர்வீஸ் சாலையில் வேகத்தடை
செஞ்சி: செஞ்சியில் பள்ளி மாணவர்கள் அதிகம் செல்லும் மேல்களவாய் ரோடு சர்வீஸ் சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் வேகத்தடை அமைத்துள்ளனர். செஞ்சியில் புதிதாக அமைத்துள்ள புறவழிச்சாலையில் இருந்து செஞ்சி - மேல்களவாய் சாலையில் இணையும் சர்வீஸ் சாலை மண் சாலையாக இருந்தது. இரண்டு மாதம் முன்பு மண் சாலையை தார் சாலையாக அமைத்தனர். இந்த சர்வீஸ் சாலை இணையும் இடத்தின் வழியாக மூன்று தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் சென்று வருகின்றனர். இங்குள்ள சர்வீஸ் சாலை சரிவாக இருப்பதால் இந்த வழியில் வந்த வாகனங்கள் வேகமாக வந்து மாணவர்கள் செல்லும் மேல்களவாய் சாலையில் நுழைந்தன. இதனால் அடிக்கடி சிறிய விபத்துக்கள் நடந்து வந்தன. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால் பெற்றோர் கவலையில் இருந்தனர். இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைத்து அதன் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இதனால் பெற்றோர்களும், பொது மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.