அரசு பணியாளர் தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வகுப்பு
விழுப்புரம்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு, தாட்கோ மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2-A தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் தாட்கோ மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.comஎன்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.