தொழிலாளி கொலை 3 பேருக்கு ஆயுள்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்,48; கூலித் தொழிலாளி. பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தனுஷ்,32; இவர்களுக்குள், தோட்டத்தில் கழிவு நீர் செல்வதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி இரு குடும்பத்திற்கும் தகராறு ஏறு்பட்டது. ஆத்திரமடைந்த தனுஷ், அவரது தம்பிகள் வெங்கடேஷ், 30; சுரேஷ், 28; ஆகியோர், மறுநாள் காலை 6:00 மணிக்கு நடைபயிற்சி சென்ற நாகராஜை வழிமறித்து அடித்து கொலை செய்தனர்.புகாரின் பேரில், தனுஷ், வெங்கடேஷ், சுரேஷ் மற்றும் அஞ்சலை ஆகியோரை கைது செய்த விழுப்புரம் தாலுகா போலீசார், 4 பேர் மீதும் விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், குற்றம் சாட்டப்பட்ட தனுஷ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அஞ்சலையை விடுதலை செய்து உத்தரவிட்டார்.