100 நாள் வேலை திட்டம் பறிப்பு: காங்., பிரசாரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கிராமங்களில், மத்திய அரசின் 100 நாள் வேலை திட்ட பறிப்பை விளக்கி, காங்கிரஸ் சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் கட்சி அலுவலகத்தில், மத்திய மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2005ம் ஆண்டில் கொண்டு வந்த தேசிய ஊரக வேலை திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதாக அமைந்தது. ஆனால், பா.ஜ., அரசு, தற்போது இந்த திட்டத்தை சிதைக்கும் விதத்தில், காந்தி பெயரை மாற்றி, திட்டத்தின் பெயரை மாற்றம் செய்தும் அறிவித்துள்ளது. 100 நாள் வேலையை 125 நாளாக உயர்த்துவாக ஏமாற்றி, இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பையும் குறைத்து, மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என மாற்றியுள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயல்கின்றனர். இதனை கண்டித்தும், மத்திய பா.ஜ., அரசின் மக்கள் விரோத செயல்களை விளக்கியும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், காங்., சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சீனுவாசகுமார் கூறினார். மாநில செயலாளர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக்அலி உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.