மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
வானுார்: வானுார் அருகே இருவேறு இடங்களில் மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கிளியனூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 17 குவாட்டர் பாட்டில்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், மெய்யூர் ராமஜெயம் மகன் சரத்குமார், 35; என்பதும், நண்பர்களுக்கு கொடுப்பதற்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் சரத்குமாரை கைது செய்து, 17 மதுபாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவம்
ஆரோவில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சிற்றம்பலம் ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூத்துறை நோக்கி பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். பைக்கில் 20 டின் பீர்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் பைக் ஓட்டி வந்த பூத்துறை விஷால், 24; என்பவரை கைது செய்து பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.