கடலில் சிக்கிய சுற்றுலா பயணிகள் 2 பேர் பத்திரமாக மீட்பு
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே கடலில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் 2 பேரை கடலோர காவல் படையால் மீட்கப்பட்டனர்.கர்நாடகா மாநிலம், தும்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் கவுதம், 22; மற்றும் கிரன், 22; இந்த இருவரும், கடந்த இரு தினங்களுக்கு முன் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு வந்தனர்.இங்கு அறை எடுத்து தங்கி, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, கோட்டக்குப்பம் அருகே தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு சென்று குளித்தனர்.அப்போது எழுந்த ராட்சத அலையில் கவுதம், கிரன் ஆகிய இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் பிரிவு புதுக்குப்பம் கடலோர போலீஸ் நிலைய ஊர்க்காவல் படை வீரர் சுந்தர், கடலில் இறங்கி, ஆழப்பகுதியில் அடித்து செல்லப்பட்ட இருவரையும் துரிதமாக மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.பத்திரமாக மீட்கப்பட்ட அவர்களுக்கு போலீசார் முதலுதவி அளித்தனர். பின் இருவருக்கும் அறிவுரை வழங்கி, பெற்றோரிடம் தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். தக்க தருணத்தில் இருவரையும் காப்பாற்றிய கடலோர ஊர்க்காவல் படை வீரரை அனைவரும் பாராட்டினர்.