பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்த 4 வயது சிறுமி பலி
விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல், 34. இவரது மனைவி சிவசங்கரி, 32. இவர்களது மகள் லியா லட்சுமி, 4, விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., படித்தார். நேற்று பகல், 12.00 மணிக்கு உணவு இடைவேளையின் போது சிறுவர்கள் வகுப்பறைக்கு வெளியே விளையாடி, மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர். ஆனால், லியா லட்சுமி வரவில்லை. தேடியபோது, அருகில் இருந்த செப்டிக் டேங்க் மேல் மூடி தகரம் உடைந்திருந்தது. அதன் வழியே பார்த்தபோது, செப்டிக் டேங்கிற்குள் குழந்தை கிடந்தது தெரிந்தது.உடன் பள்ளி நிர்வாகத்தினர், சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தகவலறிந்து திரண்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமி இறந்ததாக கூறி, விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று, 4:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்தனர்.