அரசியல்வாதி பினாமிகளே உஷார்.... கல்குவாரி குத்தகையில் பலிகடாவாகலாம்
எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,வாக வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் பதவியில் இருக்கும் போதே கல்குவாரி குத்தகை அல்லது பெட்ரோல் பங்க் திறந்து விடுகின்றனர். இதே போன்று அரசியல் கட்சியில் செல்வாக்கு உள்ளவர்களும் கல்குவாரி குத்தகை எடுக்கின்றனர்.இது போன்று குத்தகை எடுப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே விதிமுறைகளின் படி கல்குவாரியில் கல் எடுக்கின்றனர். பெரும்பாலானோர் முறைகேடாக கல் எடுக்கின்றனர். இவர்கள் ஆளும் கட்சியாக இருக்கும் போது முறைகேடு செய்தால் பிரச்னை ஏற்படுவதில்லை.ஆட்சி மாற்றம் நடந்து, ஆதரவான அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் வரும் போது விசாரணையில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததை கண்டு பிடித்து விடுகின்றனர்.இதனால் வழக்கு பதிவதுடன், அபராதமாக பல லட்சம் ரூபாயை செலுத்த வேண்டி உள்ளது. அத்துடன் வழக்கையும் சந்திக்க வேண்டியுள்ளது. வழக்கினால் அரசியல் வாழ்க்கையில் சிக்கலும் ஏற்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் சில கல்குவாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இதனால் உஷாரான அரசியல் பிரமுகர்கள் இப்போது தங்கள் பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ கல் குவாரி குத்தகை எடுக்காமல், தங்களிடம் உள்ள விசுவாசம் மிக்க பினாமிகள் பெயரில் கல் குவாரி குத்தகை எடுத்து வருகின்றனர்.பினாமிகள் பெயரில் எடுக்கப்படும் கல்குவாரிகளில் முறைகேடு நடந்தால் எதிர்காலத்தில் பினாமியாக இருப்பவர் பலிகடாவாக மாறி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.