தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட உடல் வானுார் அருகே கல்குவாரியில் மீட்பு
வானுார் : வானுார் அருகே தலை, கை, கால்கள் இன்றி கிடந்த உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில், சாக்கு பையில் கட்டப்பட்ட நிலையில் மனித உடல் இருப்பதாக வானுார் போலீசுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன், மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது 30 வயதிற்குட்பட்ட ஆண் நபரின் உடல் மட்டும் இருந்தது.தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் மார்பில் கஸ்துாரி என, பச்சை குத்தப்பட்டிருந்தது. உடலை காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தை எஸ்.பி., தீபக் சிவாச் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், கைரேகை பிரிவு செல்வராஜ், தடயவியல் பிரிவு சுரேஷ் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து திருவக்கரை வி.ஏ.ஓ., மார்க்ஸ் கொடுத்த புகாரின் பேரில், வானுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களின் விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.அதே பகுதியில் அருகில் உள்ள கல்குவாரியில் கடந்த 12ம் தேதி பெண் ஒருவரின் உடல் சாக்கு மூட்டையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண் உடல் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலை, கை, கால்கள் எங்கே?
கொலை செய்யப்பட்ட நபரின் 2 கைகள், தலை, 2 கால்களும் வெட்டப்பட்டுள்ளது. கொலை செய்த நபர், அடையாளம் காணாமல் இருக்க உடலை மட்டுமே கல்குவாரியில் வீசி விட்டு, மற்ற பாகங்களை வேறு இடத்தில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், உடலில் உள்ள பாகங்கள் அனைத்தையும், வெறியுடன் வெட்டி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.