கருமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
செஞ்சி; மேல்எடையாளம் கருமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.செஞ்சி அடுத்த மேல்எடையாளம் கிராமத்தில் கருமாரியம்மன் பூவாத்தம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8 நாட்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், இரவு பூங்கரகம் மற்றும் சாமி வீதி உலா நடந்தது.நேற்று 9 ம் நாள் விழா காலை 8 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 11 மணிக்கு அன்னதானமும், 12 மணிக்கு சாகை வார்த்தலும் நடந்தது. மாலை 5 மணிக்கு வான வேடிக்கையுடன், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டும், காப்பு களைதலும், கரகம் பிரியும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.