பைக் மீது கார் மோதி சென்னை வாலிபர் பலி
திண்டிவனம் திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் சென்னை வாலிபர் உயிரிழந்தார்.சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாதேஷ், 18; இவரது நண்பர் அருண்குமார், 20; இருவரும் நேற்று காலை திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பஜாஜ் பிளாட்டினம் பைக்கில் வந்தனர்.பின், ஆலகிராமத்தைச் சேர்ந்த உறவினரான சங்கர் மகன் நித்திஷ், 16; என்பவருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று திண்டிவனம் நோக்கி திரும்பினர். பைக்கை மாதேஷ் ஓட்டினார். மாலை 3:00 மணியளவில் திண்டிவனம் - செஞ்சி சாலையில், கொணக்கம்பட்டு பாலத்தைக் கடந்தபோது, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற மகேந்திரா கார், பைக் மீது மோதியது.இதில், மாதேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அருண்குமார், நித்திஷ் இருவரும் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.