மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் அசத்தல்: தனித்திறனை வெளிப்படுத்திய மாணவர்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடங்கிய மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தனித்திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்தாண்டுக்கான (2024-25) மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கி நடந்தது. விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல் கட்டமாக 6,7,8 ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 370 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மேற்பார்வையில், உதவி திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன், தலைமை ஆசிரியர்கள் கோவிந்தன், மோகன்ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ஆகியோர் ஒருங்கிணைப்பில் போட்டிகள் நடந்தது. கவின்கலை-நுண்கலை, நடனம், இசை, நாடகம் ஆகிய 4 தலைப்புகளில், கரகம், கிராமிய நடனம், நடிப்பு, நாடகம் உள்ளிட்ட 11 விதமான கலைப் போட்டிகள் நடந்தது. மாணவர்கள் குழுவாகவும், தனித்தும் வந்து தனித்திறனை வெளிப்படுத்தி அசத்தினர். உமா, பானு, பிரித்தா, சிலம்பரசன், நிர்மலா, ஆனி உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் குழுவினர் போட்டிகளை கண்காணித்தனர். தனித்தனி நடுவர் குழுவினர், மாணவர்களின் கலைப் போட்டிகளை பார்வையிட்டு தேர்வு செய்தனர்.பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த தனித்திறமைகளை வெளிப்படுத்திடும் நோக்கில், அவர்களுக்கு ஊக்கமளித்திடும் வகையில், ஆண்டு தோறும் இந்த கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்வாகும் குழுவினர், அடுத்து மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பார்கள். மாவட்ட அளவில் தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். உயர்நிலை வகுப்புகளுக்கு இன்று போட்டி நடந்தது. இதனையடுத்து, 9,10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று, மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கும் என்று, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.