ஊரக வேலை திட்டத்தில் பாரபட்சம் பஸ்சை சிறை பிடித்த பெண்கள்
செஞ்சி: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி ஒதுக்குவதிலும், கூலி நிர்ணயம் செய்வதிலும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி பெண்கள், அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.வல்லம் ஒன்றியம், மேல்ஒலக்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 1 மற்றும் 2வது வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு பணிகளை ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர். வேலை செய்பவர்களுக்கு கூலி நிர்ணயம் செய்வதில் பாரபட்சம் காட்டுகின்றனர் எனக் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 9:45 மணிக்கு மேல் ஒலக்கூரில் இருந்து செஞ்சிக்கு வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த ஏ.பி.டி.ஓ., ராஜசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேசி சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பேரில், 10:25 மணிக்கு பஸ்சை விடுவித்தனர்.