உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் சட்டசபை பொது கணக்கு குழுவினர்... ஆய்வு; பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மாவட்டத்தில் சட்டசபை பொது கணக்கு குழுவினர்... ஆய்வு; பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: தமிழக சட்டசபை பொது கணக்கு குழுவினர், விழுப்புரத்தில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக சட்டசபை பொது கணக்கு குழுவினர் நேற்று வந்தனர். குழு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விழுப்புரம் அடுத்த பில்லுாரில் நபார்டு கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளையும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், மருத்துவமனை வளாகத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தனர். பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக சட்டசபை பொது கணக்குக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது. பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார். இதில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உயர்கல்வித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, சுற்றுலா பண்பாடு, தொழிலாளர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை, வணிகவரி, பதிவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை போன்ற துறைகளில் உள்ள தணிக்கை பத்திகளின் மீதான பதில் அறிக்கை குறித்து துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் வாரிசுதாரருக்கு அரசுப்பணிக்கான ஆணை, ரூ.6,690 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம் மற்றும் ரூ.7,280 மதிப்பீட்டில் சலவைப்பெட்டி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலா ரூ.3,130 வீதம், ஒரு பெற்றோர் கொண்ட வறுமையில் உள்ள 4 மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க கல்வி கட்டணம், குடும்ப வறுமை காரணமாக செங்கல் சூளையிலிருந்து மீட்ட இரண்டு மாணவியர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் உயர்கல்வி படிக்க கல்வி கட்டணம் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு விவசாயிக்கு 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 ரூபாய் மதிப்பீட்டில் நுண்ணீர் பாசன கருவியும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின்கீழ் ஒரு நபருக்கு ரூ.5 லட்சத்திற்கான நில உடமைக்கான பத்திரமும், சமூக நலத்துறை சார்பில் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் ரூபாய்க்கான புதிய வைப்புத் தொகை பத்திரம் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு 8 லட்சத்து 10 ஆயிரத்து 569 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார். ஆய்வின்போது, பொது கணக்குக்குழு உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், அப்துல் சமது மற்றும் லட்சுமணன் எம்.எல்.ஏ., சட்டசபை இணைச் செயலாளர் ரேவதி, துணைச் செயலாளர் பாலசீனிவாசன், எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் லுாசி நிர்மல் மெடெனோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை