UPDATED : ஏப் 24, 2025 03:51 PM | ADDED : ஏப் 23, 2025 04:33 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் மின் உற்பத்தி குறைந்ததால் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், செயற்பொறியாளர் அலுவலகங்கள் மூலம் 15க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் 2,571 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின் பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மின் சப்ளை பகிர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இதில், பூத்தமேடு மின்துறை பவர் ஸ்டேஷன் மூலம் 230 கிலோ வோல்ட் மின்சாரம் உற்பத்தியாக வந்து சேருகிறது. அங்கிருந்து விழுப்புரம் துணை மின் நிலையத்திற்கு 110 கிலோ வோல்ட் பிரித்து அனுப்புகின்றனர். இதன் மூலம் கஞ்சனுார், மதுரப்பாக்கம் உள்ளிட்ட மின் நிலையத்திற்கு 22 கிலோ வோல்ட் பிரித்து அனுப்பப்படுகிறது.அதே போல், செஞ்சி, திண்டிவனம் பகுதிகளில் 11 கிலோ வோல்ட் மட்டுமே மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை அதிகாரிகள் மின் நுகர்வோர்கள் மட்டுமின்றி விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்கும் சப்ளை செய்து வருகின்றனர்.கோடை காலங்களில் மின்சார தேவை சற்று கூடுதலாக இருப்பதால் ஆண்டுதோறும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னைகள் இருந்து வருகிறது.கோடை காலம் துவங்கியதையொட்டி, கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில், பூத்தமேடு பவர் ஸ்டேஷனுக்கு 200 முதல் 210 கிலோ வோல்ட் மட்டுமே மின் உற்பத்தி கிடைக்கிறது. அதே போல், 110 கிலோ வாட் மின்சாரம் கிடைக்க வேண்டிய இடத்தில் 95 கிலோ வோல்ட்டும், 22 கிலோ வோல்ட் கிடைக்க வேண்டிய இடங்களில் 19 கிலோ வோல்ட் மின்சாரம் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.இதனால், பல டிரான்ஸ்பார்மர்களில் மின்சார பகிர்வு அளவுக்கதிமாக இழுப்பதால் வெடிப்பது, தீ பிடிப்பு சம்பவங்கள் நடக்கிறது. மின்தேவை பெரும்பாலும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும், இரவு 11:00 மணிக்கு மேல் கூடுதலாக தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் ஏற்படும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் மின்துறை அதிகாரிகள் திணறுகின்றனர். மறுபுறம் வீடுகளில் உள்ள 'ஏசி', 'டிவி', பேன் உள்ளிட்டவை பழுதாவதால் மின்துறை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது தொடர்பாக பொதுமக்கள் புகார் கூறியும், மின்உற்பத்தி குறைபாடு காரணமாக அதிகாரிகள் தற்போது வரும் மின் சப்ளையை பகிர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை சரியாகவில்லை என்றால் பொதுமக்கள் பலரும் சாலையில் இறங்கி போராடவும் முடிவு செய்துள்ளனர். கோடை காலங்களில் மின் தேவையை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் மின் துறை அதிகாரிகள் திணறும் சம்பவம் இந்தாண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கதையாகியுள்ளது.