உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுரை

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுரை

விழுப்புரம்: மாவட்டத்தில் காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு களில் இருந்து பயிர் இழப்பை ஈடு செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கவும் விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி செய்யும் காரீப் பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கு நிலக்கடலை, 24 குறுவட்டங்களிலும், கம்பு, 8 குறுவட்டங்களிலும் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, கம்பு நடவு செய்துள்ள விவசாயிகள் நாளை, 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனம் யூனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விவசாயி ஏக்கருக்கு பிரிமியமாக நிலக்கடலைக்கு ரூ.623.75 செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.31,187.37 கிடைக்கிறது. கம்புவிற்கு பிரிமியமாக ரூ.239.90 செலுத்தினால், காப்பீடாக ரூ.11,995.14 கிடைக்கிறது. பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய, அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். இதோடு விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விபரங்களையும் விவசாயிகள் பதிய சரியாக அளிக்க வேண்டும். இந்த விவரங்களை அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ