அரசு திட்ட வளர்ச்சி பணிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறைகளுக்கு இடையிலான திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். தமிழக அரசு அறிவித்த மற்றும் செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள், முன்னேற்ற பணிகளின் விவரம் மற்றும் நிலுவை திட்டங்களை விரைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பொதுப்பணித்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசு துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் நிலுவைக்கான காரணங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிலுவை திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்.ஓ., குமரவேல், மாநில நெடுஞ்சாலை டி.ஆர்.ஓ., ராஜகுமார் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.