கல் குவாரியில் உடல் கிடந்த வழக்கு வெளி மாவட்டங்களில் விசாரணை வெளி மாவட்டங்களில் போலீஸ் விசாரணை
வானுார்: விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு, சாக்கு பையில் கட்டப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலின் மார்பில் கஸ்துாரி என பச்சை குத்தப்பட்டிருந்தது.இது குறித்து வானுார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.விழுப்புரத்தில் இருந்து வந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து, அருகில் உள்ள மற்றொரு கல் குவாரியில் சென்று மோப்பம் பிடித்து நின்றது. இதனால் அந்த குவாரியில் தலை, கை, கால்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அந்த குவாரியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் யாரும் காணாமல் போனதாக சமீபத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது உறுதியானது. இதன் காரணமாக தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் காணாமல் போன நபர்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி., தெரிவித்தார்.கடந்த 12ம் தேதி, அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் பெண் ஒருவரின் சடலம், சாக்கு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண், புதுச்சேரியை சேர்ந்தவர். கொலை செய்த நபரே வாக்குமூலம் அளித்த சற்று நேரத்தில், கல் குவாரியில் இருந்து அந்த பெண்ணின் சடலத்தை வானுார் போலீசார், புதுச்சேரி போலீசாருடன் ஒருங்கிணைந்து கண்டெடுத்தனர். ஆனால், நேற்று முன்தினம் கல்குவாரியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடலில், தலை, கை, கால்கள் இல்லாததால், கொலையானவர் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது.