விழுப்புரத்தில் ஜமாபந்தி முகாம் வளவனுார் குறுவட்ட மக்கள் மனு
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில், வளவனுார் குறுவட்ட மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், இந்தாண்டுக்கான ஜமாபந்தி முகாம் கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் சமுக பாதுகாப்பு திட்ட சப்கலெக்டர் முகுந்தன் தலைமை தாங்கி, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகிறார். விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, தனி தாசில்தார்கள் ஆதிசக்தி சிவகுமரிமன்னன், ஆனந்தன், துணை தாசில்தார்கள் வெங்கடபதி, குணசேகரன், திருமாவளவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். துவக்கத்தில் காணை குறுவட்ட கிராமங்களுக்கான மனுக்கள் பெறப்பட்டது. நேற்று வளவனுார் குறுவட்ட கிராமங்களுக்கான முகாம் நடந்தது. நரையூர், இளங்காடு, பெத்துரெட்டிக்குப்பம், குடிமியாங்குப்பம், சாலையாம்பாளையம், நன்னாட்டாம்பாளையம், மழவராயனுார், வளவனுார், குமாரகுப்பம், சேர்ந்தனுார், குச்சிப்பாளையம், பிலலுார், அரசமங்கலம் கிராம மக்கள் மனுக்களை வழங்கினர்.மகளிர் உரிமை தொகை, இலவச மனைபட்டா, கலைஞர் கனவு இல்லம், பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட 95 மனுக்கள் பெறப்பட்டது. இன்று 27 ம் தேதி, கண்டமங்கலம் குறுவட்ட கிராமங்களுக்கான முகாம் நடக்கிறது.