போலி நபர் மூலம் நிலம் அபகரிப்பு: 5 பேர் மீது வழக்கு
விழுப்புரம் : போலி நபர் மூலம் 2 ஏக்கர் நிலத்தை அபகரித்த நபர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். சென்னை அண்ணா நகர் பொன்னி காலனியை சேர்ந்தவர் சுதாகரன், 38; இவருக்கு, 11 வயது இருக்கும்போது, இவரது தாத்தா வினாயகம், அவரை 'கார்டியனாக' கொண்டு கடந்த, 1997ம் ஆண்டு, விழுப்புரம் அருகே, பொய்யப்பாக்கத்தில் 2.03 ஏக்கர் இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். அந்த இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, அசல் பத்திரங்களை, பொய்யப்பாக்கத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரிடம் கடந்த 2000ம் ஆண்டு கொடுத்தார். தொடர்ந்து அவர் ராமநாதனிடம் இருந்து, அசல் பத்திரங்களை வாங்கவில்லை. இந்நிலையில்,ராமநாதன் இறந்த பிறகு அவரது மகன் வாசுதேவன் கடந்த, 2007 ம் ஆண்டு, அந்த அசல் பத்திரங்களை வைத்து, அவருடைய பெயரில், 'போலி'யான சுதாகரன் மூலம் பத்திரம் பதிவு செய்தார்.இதற்கு கடலுார் மாவட்டம், பாலுாரை சேர்ந்த நடராஜ், கோலியனுாரை சேர்ந்த முருகன் ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டனர். தொடர்ந்து அந்த இடத்தை வாசுதேவன், போலி ஆவணம் தயாரித்து சின்னராஜி என்பவரிடம் விற்றார். இது குறித்த புகாரின்பேரில், வாசுதேவன், நடராஜ், முருகன், விழுப்புரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் செல்வராஜ், அப்போது பணியில் இருந்த இணை 1 பதிவாளர் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.