டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை
செஞ்சி: செஞ்சி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.செஞ்சி அடுத்த வடபுத்துார் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களாக காசிராஜன், மூர்த்தி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார், விற்பனையாளர்களுடன் கடைக்குள் சென்று பார்த்தனர். அதில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிராந்தி, பீர் பாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது.மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.