உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் டிக்கெட் பரிசோதகராக நடித்த மனநலம் பாதித்த நபரால் பரபரப்பு

ரயிலில் டிக்கெட் பரிசோதகராக நடித்த மனநலம் பாதித்த நபரால் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் பாசஞ்சர் ரயிலில் டிக்கெட் பரிசோதகராக நடித்த மனநலம் பாதித்த நபரை, போலீசார் பிடித்து உறவினரிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு நேற்று இரவு பாசஞ்சர் ரயில் வந்தது. அப்போது, ரயிலில் வந்த நபர் ஒருவர், பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதித்துள்ளார்.ஒரு பயணி புதுச்சேரி - காஞ்சிபுரத்திற்கான டிக்கெட்டை காண்பித்தபோது, அந்த டிக்கெட் செல்லாது என கூறியுள்ளார். சில பயணிகளிடம் டிக்கெட் இல்லாமல் இருந்ததால், அவர்களை எச்சரித்த அந்த நபர், அவர் கையில் வைத்திருந்த டிக்கெட்டை கொடுத்துள்ளார். இதனால், பயணிகளுக்கு அவர் டிக்கெட் பரிசோதகரா என்ற சந்தேகம் எழுந்தது.இரவு 8:50 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தவுடன், அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரிடம் விசாரித்தனர்.அப்போது அவர், மானாமதுரை அடுத்த அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சதீஷ், 25; என்பதும், பி.காம்., பட்டதாரியான அவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.திடீரென கடந்த ஓராண்டுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, வீட்டிலிருந்து ஊருக்குச் சென்றவர், புதுச்சேரிக்கு வந்துள்ளார். அங்கு மது அருந்திய நிலையில், இரவு விழுப்புரம் - புதுச்சேரி பாசஞ்சர் ரயிலில் ஏறி வந்ததோடு, தான் கூடுதலாக வாங்கி வந்த ரயில் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு, ரயில் டிக்கட் பரிசோதகர் போல் நடந்துகொண்டது தெரியவந்தது.இதனையடுத்து, விழுப்புரம் ரயில்வே போலீசார், அவரது வீட்டிற்கு தகவல் அளித்தனர். நேற்று விழுப்புரம் வந்த அவரது உறவினர்கள், சதீஷ் மனநிலை பாதித்து சிகிச்சை மேற்கொண்டதற்கான மருத்துவ ஆவணங்களைக் காண்பித்தனர். இதனால், போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ