உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட நீதிமன்றங்களில் 14ம் தேதி தேசிய லோக் அதலாத்

மாவட்ட நீதிமன்றங்களில் 14ம் தேதி தேசிய லோக் அதலாத்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திக்குறிப்பு :விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், வானுார், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருவெண்ணெய்நல்லுார், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சங்கராபுரம் நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் வரும் 14ம் தேதி (சனிக்கிழமை) நடக்கவுள்ளது.இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக்கடன், கல்விக்கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் மற்றும் சொத்துவரி பிரச்னைகள் போன்ற வழக்குகளை விசாரித்து சமரசமாக முடிக்கப்படுகிறது.மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுவதுமாக திரும்ப தர வாய்ப்புள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தால் பொதுமக்களுக்கு சட்டரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படுகிறது. வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களின் வழக்குகளுக்கு உடனடி தீர்வை பெறலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி