குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி
திண்டிவனம்: திண்டிவனத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, திண்டிவனத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 10 செ.மீ., மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கிடங்கல் 1 கோட்டைமேடு திருநாவுக்கரசர் நகரில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில், ஒருபுறத்தில் சாலை அமைக்காததால், மழைநீரை கடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.