மேல்மலையனுார் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை அம்மன் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரமும் செய்தனர்.மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அங்காளம்மன் முதல் சுற்று பிரகாரத்தில் எழுந்தருளினார். அம்மன் முன்னிலையில் 108 பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். நிறைவாக மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.