பார்மசி மேலாளருக்கு தவறான சிகிச்சையா விழுப்புரத்தில் உறவினர்கள் மறியல்
விழுப்புரம் : விழுப்புரத்தில் பார்மசி மேலாளருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் இறந்ததாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 33; இவர், சென்னையில் உள்ள ஒரு பார்மசியில் மேலாளராக பணிபுரிகிறார்.கடந்த 6ம் தேதி உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக, சொந்த ஊருக்கு வந்த அறிவழகன், பைக்கில் விழுப்புரத்தில் இருந்து ஏனாதிமங்கலம் சென்றார்.கப்பூர் கூட்ரோடு அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.காயமடைந்த அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்க கால், தோள் பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.சில தினங்கள் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.இந்நிலையில், அறிவழகன் குடும்பத்தினர் நேற்று விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. தவறான சிகிச்சை அளித்ததால் தான் அறிவழகன் இறந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மதியம் 1:15 மணிக்கு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மேற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 1:25 மணிக்கு மறியலை கைவிட செய்தனர்.இந்த சம்பவத்தை யொட்டி, மருத்துவமனை முன்பு போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.