முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை
: விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 'சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி' வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். தமிழகத்தில், கடந்த 2024ம் ஆண்டு மட்டும், 61 ஆயிரத்து 904 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில், 18 ஆயிரத்து 74 நபர்கள் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய, 4 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில், கடந்த 2024 ம் ஆண்டு, 9 ஆயிரத்து 168 இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டன. இவற்றில், பலத்த காயமடைந்த, 2 ஆயிரத்து 173 பேர் உயிரிழந்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருவண்ணாமலை நெடுஞ்சாலை பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைகின்றனர். விபத்தில் உயிருக்கு போராடுபவர்களை மீட்டு, சென்னை அல்லது செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, விபத்தில் காயமடைவோர் அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு, திண்டிவனம், ஓங்கூர், தொழுப்பேடு மற்றும் விழுப்புரம், உளுந்துார்பேட்டை ஆகிய பகுதிகளில் நிகழும் விபத்துக்களில் படுகாயமடைந்த நபர்கள், உடனடியாக கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த மருத்துவமனையில், சென்னை மார்க்கத்தில் அச்சிறுப்பாக்கம் (60 கி.மீ.,) மற்றும் திருச்சி மார்க்கத்தில் தொழுதுார் (94 கி.மீ.,) வரை நிகழும் விபத்தில் சிக்குவோர் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். அதனால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை, சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி தரத்திற்கு உயர்த்திட தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல்வர் நிறைவேற்றுவார்
இந்த மருத்துவமனை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சாலை விபத்துகளில் காயமடைந்து ஆபத்தான நிலையில் அழைத்து வரப்படுகின்ற மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, உயிர் காக்கும் பணியை இந்த மருத்துவமனை செய்து வருகிறது. இந்த நிலையில், சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி தரத்திற்கு உயர்த்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த கோரிக்கையை நிச்சயம் முதல்வர் நிறைவேற்றித் தருவார். அன்னியூர் சிவா, எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி
மத்திய அரசை வலியுறுத்துவேன்
இந்த மருத்துவமனை ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. விபத்தில் சிக்கி படுகாயத்துடன் வருவோரை காப்பாற்றுவதில், அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களின் உயிர்களை காக்க இம்மருத்துவமனை கூடுதல் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட வேண்டும். இது குறித்து அரசிடம் வலியுறுத்துவேன். ரவிக்குமார், எம்.பி., விழுப்புரம் லோக்சபா தொகுதி --நமது சிறப்பு நிருபர்--