70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மிக தம்பதிகளுக்கு சிறப்பு மரியாதை
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தமிழக அரசு ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள 70 வயது நிறைந்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு மரியாதை செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 70 வயது பூர்த்தியடைந்த திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்த 5 தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பட்டு புடவை, வேட்டி, சட்டை, துண்டு உள்ளிட்டவை வழங்கி மாலைகள் அணிவித்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் கணேசன், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் பாலமுருகன், செயல் அலுவலர் அறிவழகன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.