கால்நடை மேய்க்கால் நிலங்களை மேம்படுத்துவது தேவை: நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் கூடுதல் கவனம்
காரியாபட்டி: கால்நடை வளர்ப்பை அதிகப்படுத்த மேய்க்கால் நிலங்களை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பால் நிலங்கள் காணாமல் போகிறது. இதை தடுத்து, பின் தங்கிய பகுதிகளான நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.மாவட்டத்தில் தொழில் வசதி இல்லாத வளர்ந்த நகர்ப்பகுதியில் மட்டுமே உள்ளன. ஊரகப் பகுதிகளான நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. அப்பகுதியில் கால்நடை வளர்க்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் கால்நடை துறைக்கு சொந்தமான ஏராளமான மேய்க்கால் நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் பராமரிக்கப்படாமல் கருவேலமரக் காடாகவும், தரிசு நிலங்களாகவும் கிடக்கின்றன. சில ஊர்களில் ஆக்கிரமிப்பு செய்து தனி நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க இந்நிலங்களை பண்படுத்தி, கால்நடை தீவனங்களை விளைவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன் மாவட்ட நிர்வாகம் பசுமை தமிழகம் மிஷன் திட்டத்தில் ரூ. பல லட்சம் செலவு செய்து மரக்கன்றுகள் நட்டன. சரிவர பராமரிக்கப்படாததால் நிதி, வீணானது. இதையடுத்து மேய்க்கால் நிலங்களை மேம்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க, தீவன உற்பத்தியை பெருக்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக தொழில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளான நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளில் உள்ள மேய்க்கால் நிலங்களை பண்படுத்தி மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்படடுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் கால்நடை உற்பத்தியை பெருக்க வாய்ப்பு உள்ளது. கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்து பிற பகுதிகளுக்கும் சப்ளை செய்யவும் முடியும்.இதை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர விவசாயிகளின் விளை நிலங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பயிர் வளர்ப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 90 ஏக்கரில் கால்நடை தீவனங்கள் மானியத்தில் நட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல் அனைத்து பகுதிகளிலும் நட நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள மேய்க்கால் நிலங்களை கண்டறிந்து அதனை மேம்படுத்தி, ஆக்கிரமிப்பை அகற்றி, கால்நடை உற்பத்தி பகுதிகளாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.